அரசு உத்தரவையொட்டி இன்று திறப்பு மாணவர்கள் வருகைக்காக பொலிவு பெறும் பள்ளிகள்

நாகை, ஜன.19: நாகை மாவட்டத்தில், பள்ளிகள் திறக்க உள்ளதால் வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானங்கள் தூய்மை செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்காமல் இருந்தது. இந்நிலையில் இன்று (19ம் தேதி) முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களின் எதிர்காலம் கருதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள 314 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, சிக்கல், அக்கரைப்பேட்டை, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளின் வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை சீரமைக்கும் பணியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பள்ளிகளில் உள்ள மரங்கள் மற்றும் செடிகளை அகற்றுவதோடு மழை நீரை வடிய வைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

Related Stories: