கொள்ளிடம் ஆற்றங்கரை ஓரத்தில் மலைபோல் குவிந்து கிடந்த குப்பை அகற்றம்

கொள்ளிடம், ஜன.19: கொள்ளிடம் ஆற்றங்கரை ஓரத்தில் மலைபோல் குவிந்து கிடந்த ஊராட்சி குப்பைகள் பல மாதங்களுக்கு பிறகு நேற்று அகற்றப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த ஆணைக்காரன்சத்திரம் மற்றும் கோபாலசமுத்திரம் ஊராட்சிகளை சேர்ந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு தினந்தோறும் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே ரயில்வே பாலத்தை ஒட்டி கொட்டப்பட்டு வந்தன. பல வகையான மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், அழுகிப்போன காய்கறிகள், கோழி இறைச்சி உள்ளிட்ட பொருட்கள், இறந்த விலங்கினங்கள், கோழிகழிவுகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு கழிவுகளும் குப்பைகளும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டன. இந்த குப்பைகள் அனைத்தும் துர்நாற்றம் வீசின. கொள்ளிடம் சோதனைச் சாவடியில் இருந்து சந்தப் படுகை, திட்டு படுகை, நாதன்படுகை, முதலை மேடு, முதலைமேடுதிட்டு, நாணல் படுகை, அனுமந்தபுரம், மகேந்திரப்பள்ளி, அளக்குடி, பில் படுகை, காட்டூர் உள்ளிட்ட பல கிராம மக்கள் கடும் துர்நாற்றத்திற்கு இடையை காலத்தை கடந்தி வந்தனர்.

இதுகுறித்து கரையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தன. ஒரே இடத்தில் பல மாதங்களாக குப்பைகள் அழகி இருந்ததால் வீசிய துர்நாற்றத்தால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்பட்டதுடன், ஆற்று நீரும் மாசு படுத்தப்பட்டது. இதனால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் நோய்வாய்ப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கரையோர கிராம மக்கள் சார்பில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து ஆனைக்காரன் சத்திரம் மற்றும் கோபாலசமுத்திரம் ஊராட்சி நிர்வாகத்தினர் நேற்று சம்பவ இடத்திற்கு பொக்லைன் இயந்திரத்துடன் வந்து பல மாதங்களாக ஒரே இடத்தில் கொட்டைப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: