கரூர், ஜன. 19: 10 மற்றும் 12ம் வகுப்புகள் ஜனவரி 19ம்தேதி முதல் செயல்படும் என அரசு அறிவித்துள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் பள்ளிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டன. கொரனோ பரவலை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 24ம்தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுதும் கொரனோ பரவல் குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதனடிப்படையில், ஜனவரி 19ம்தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகள் செயல்படும் எனவும், மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பள்ளிக்கு வரலாம் எனவும் அரசு அறிவித்தது. இதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் இன்று முதல் செயல்படவுள்ளதால் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் உட்காரும் வகையில் தேவையான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு, மாணவர்களை வரவேற்கும் வகையில் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.