மணப்பாறை, ஜன. 17: மணப்பாறை அடுத்த கே.பெரியபட்டி, தெற்கு சேர்பட்டி மற்றும் சுற்றுவட்டார 17 கிராமங்களில் 500 ஏக்கரில் நெற்பயிர், 500 ஏக்கரில் உளுந்து, கடலை, வெங்காயம், பாசிப்பயறு உள்ளிட்ட தோட்டகலைப்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மேலும் தெற்கு மேற்பட்டியை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் என்பவர் மாநில மற்றும் மாவட்ட அளவில் விவசாயிகளுக்காக நடக்கவிருக்கும் நெல் அறுவடை (விளைச்சல்) போட்டியில் பங்கேற்க மாநில அளவில் ரூ.100, மாவட்ட அளவில் ரூ.50 கட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் மழைநீர் தேங்கி பயிர்கள் சாய்த்து அழுகியும், முளைக்கவும் ஆரம்பித்தது. சில நாட்களுக்கு முன் அந்த வயலை திருச்சி மாவட்ட விதை அலுவலர் பார்வையிட்டு இந்த நெல், விதை நெல்லுக்கு பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தார். இதனால் விவசாயி செந்தில்குமார் மற்றும் விவசாயிகள் சோகத்தில் மூழ்கினர்.