தஞ்சை, ஜன.17: நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் பணியாற்ற தஞ்சை மாவட்டத்திற்கு உட்டப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என முதுநிலை மண்டல மேலாளர் (பொ) சிற்றரசு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (நெல் கொள்முதல் பருவத்தில் மட்டும்) பணியாற்றிட பட்டியல் எழுத்தர் 62, உதவுபவர் 72, காவலர் 51 பணியிடங்களுக்கு பணியாற்றிட, தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆண் பணியாளர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இட ஒதுக்கீடு முறையில் 2020ம் ஆண்டு 31.12.2020 அன்று பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முஸிலீம் 18 வயது முதல் 32 வயது வரையிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அருந்ததியர் 18 வயது முதல் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். பட்டியல் எழுத்தருக்கு பிஎஸ்சி (பயோலஜி) மற்றும் பிஎஸ்சி நான் பயோலாஜி, உதவுபவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.