×

நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் முதுநிலை மண்டல மேலாளர் தகவல்

தஞ்சை, ஜன.17: நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் பணியாற்ற தஞ்சை மாவட்டத்திற்கு உட்டப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என முதுநிலை மண்டல மேலாளர் (பொ) சிற்றரசு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (நெல் கொள்முதல் பருவத்தில் மட்டும்) பணியாற்றிட பட்டியல் எழுத்தர் 62, உதவுபவர் 72, காவலர் 51 பணியிடங்களுக்கு பணியாற்றிட, தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆண் பணியாளர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இட ஒதுக்கீடு முறையில் 2020ம் ஆண்டு 31.12.2020 அன்று பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முஸிலீம் 18 வயது முதல் 32 வயது வரையிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அருந்ததியர் 18 வயது முதல் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். பட்டியல் எழுத்தருக்கு பிஎஸ்சி (பயோலஜி) மற்றும் பிஎஸ்சி நான் பயோலாஜி, உதவுபவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டியல் எழுத்தருக்கு அடிப்படை ஊதியமாக ரூ.2,410 மற்றும் டிஏவுடன் ரூ.4,049, உதவுபவருக்கு அடிப்படை ரூ.2,359 மற்றும் டிஏவுடன் ரூ.4,049, காவலருக்கு அடிப்படை ரூ.2,359 மற்றும் டிஏவுடன் ரூ.4,049 ஊதியமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களுடன் முதுநிலை மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சை, 613001 என்ற முகவரியுள்ள அலுவலகத்தில், சான்றொப்பமிடப்பட்ட கல்விதகுதி சான்றிதழ், சாதி சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் வரும் 28ம்தேதிக்குள் நேரிலோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். வரப்பெற்ற விண்ணப்பங்களில் அரசு மற்றும் கழக விதிகளின்படி தகுதியுடைய நபர்களுக்கு நேர்காணல் கடிதம் அனுப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : Paddy Procurement Center ,
× RELATED கோபி கூகலூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு