அறந்தாங்கி, ஜன.17: மணமேல்குடி அருகே சுவர் இடிந்து விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த உடையப்பன் மகள் சத்ய. இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே நின்றிருந்தபோது, தொடர்மழையால் சேதமடைந்திருந்த அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சத்ய உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ரகுபதி எம.எல்.ஏ, மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவர் பரணிகார்த்திகேயன், மணமேல்குடி ஒன்றிய திமுக செயலாளர் சக்திராமசாமி ஆகியோர் நேரில் சென்று உயிரிழந்த மாணவி சத்யயின் தந்தை உடையப்பன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து திமுக சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதிஉதவி வழங்கினர். திமுக நிர்வாகிகள் வீரையா, பிரபுராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.