பெரம்பலூர், ஜன 17: பெரம்பலூர் நகரில் ஆலம்பாடி சாலையில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து ஒன்றரை பவுன் நகை ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராமதாஸ் (39).இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு அம்மா பாளையம் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் இவருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ராமதாஸ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.