சீர்காழி அருகே நள்ளிரவில் ஆடு திருடும் தம்பதி சிசிடிவி கேமராவில் சிக்கினர்

சீர்காழி, ஜன.17: சீர்காழி அருகே விடந்திடசமுத்திரம் பகுதியில் நள்ளிரவில் ஆடு திருடும் தம்பதியினர் சிசிடிவி கேமராவில் சிக்கியதால் அப்பகுதி சீர்காழி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் நள்ளிரவில் வீட்டின் வாசலில் படுத்து இருப்பது வழக்கம். இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களாக 7 ஆடுகள் திருட்டுப் போய் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் தினமான கடந்த 14ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதியினர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்கு சொந்தமான ஒரு ஆட்டை பிடித்து இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்வது அந்த பகுதியில் உள்ள ஒரு கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையறிந்த அப்பகுதி ஆடு வளர்ப்போர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து காணாமல் போன ஆடுகளை இந்த தம்பதியினர் தான் நள்ளிரவில் திருடிச் சென்று இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆடு திருடும் தம்பதிகள் குறித்து அப்பகுதி மக்கள் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: