ஆண்டிபட்டி, ஜன. 17: ஆண்டிபட்டி அருகே, மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை 8 பேர் கொண்ட கும்பல் குத்திக்கொலை செய்தது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது, 2 பேரை தேடி வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார் (27), கடந்த 14ம் தேதியன்று குள்ளப்புரத்திற்கு சென்று, அங்கிருந்த செல்வம், பிரபு ஆகியோருடன் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அணைக்கரைப்பட்டி மயானத்தில் நவீன்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபு, செல்வம் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் நவீன்குமாரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தனர்.