திருவள்ளூர்: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. திருவள்ளுர் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கியது. திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாமை ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் மற்றும் ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது தடுப்பூசி அளிக்கப்பட்டோரிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தனர். இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் பி.அரவிந்தன், மாநில கண்காணிப்பு மருத்துவ அலுவலர் சுரேந்திரன், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், துணை இயக்குநர் இளங்கோவன், சுகாதார துறை இணை இயக்குநர் ராணி, துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருத்தணி: திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் கோவிட் 19 தடுப்புசி வழங்கும் பணியை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசியது: கோவிட் 19 தடுப்பூசி மூன்று கட்டங்களாக போடப்படும். முதல் கட்டமாக நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மையங்களில் 574 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும், முதலில் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கும் மூன்றாம் கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்படும். தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.