திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் தண்ணீர்குளம் ஊராட்சி மக்கள் சார்பில், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவின் விபரம்: திருவள்ளூர் ஒன்றியம் தண்ணீர்குளம் ஊராட்சியில் அன்னை அஞ்சுகம் நகர், கஜேரிகுளம் உள்பட அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் இன மக்களுக்கு இலவச பட்டா வழங்கி இலவச வீடுகள் கட்டி தர வேண்டும். நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ஆரம்ப பொது சுகாதார நிலையம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர்குளம் ஏரியையும், ஊராட்சியில் உள்ள 13 குளங்களையும் தூர்வாரி கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் ஏரியில் கலக்காமல் தடுப்பதற்காக சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்க வேண்டும்.ஊராட்சிக்கு உட்பட்ட மண் சாலைகள் அனைத்தையும் தார்ச்சாலை அல்லது சிமென்ட் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்னை அஞ்சுகம் நகர், கஜேரிகுளம் ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னை அஞ்சுகம் நகரில் முதியோர் காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் ஊராட்சி செயலாளரும், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளருமான டி.டி.தயாளன், டி.எஸ்.குருபரதன், பி.ராஜன், ஏ.டி.ராஜமூர்த்தி, டி.கே.சீனிவாசன், ஆர்.சத்தியமூர்த்தி, ஜெயபால், டி.சேகர் அமலநாதன், மகேந்திரன், எம்.கௌதமன் ஆகியோர் வழங்கினர்.