பொன்னேரி: பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கூடுவது வழக்கம். ஆனால் பழவேற்காட்டில் படகுசவாரி, சுற்றுலா மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. காவல்துறையினர் ஆண்டார் மடம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை மணலியிலிருந்து பாலாஜி (32) கார்பெண்டர், இவரது நண்பர்கள் சரவணன், கார்த்திக், குணசேகர் அனைவரும் பழவேற்காடு பகுதிக்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர். மீண்டும் திரும்பிச் செல்லும்போது வழியில் ஆண்டார்மடம் அருகே ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர். வடகிழக்கு பருவமழை பெருவெள்ளத்தால் ஆண்டார்மடம் அருகே ஆற்றின் கரை உடைந்து சாலை துண்டிக்கப்பட்டு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கும்போது பள்ளத்தில் 4 பேரும் சிக்கிக் கொண்டனர்.
அங்கிருந்து தண்ணீரில் மூழ்கியபடி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். இதில் பாலாஜியை தவிர 3 பேரை காப்பாற்றினர். பாலாஜி கிடைக்கவில்லை.இதுகுறித்து திருப்பாலைவனம் மற்றும் காட்டூர் காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார், சம்பவ இடத்திற்கு நீச்சல் தெரிந்தவர்களைக் கொண்டு எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஆற்றில் மூழ்கிய பாலாஜியை கண்டுபிடித்து பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துபோது பாலாஜி இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.