மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி பலி

ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல், எஸ்.எம். நகரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிய காவலர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு வட மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்கின்றனர். இதேபோல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ருசியா பேட்ரோ (28) என்பவர், தனது மனைவி புஷ்பா மற்றும் 2 குழந்தைகளுடன் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் புதிய கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அதில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் ருசியா பேட்ரோ ஈடுபட்டார். அவர் மின்மோட்டார் மூலம் பள்ளத்தில் தேங்கிய நீரை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ருசியா மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்து, ருசியா பேட்ரோவின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Related Stories: