வாலாஜாபாத்: தாம்பரம் - வாரணவாசி சாலையில், குழாய் உடைந்து வீணாக பாலாற்று குடிநீர் வெளியேறுகிறது. இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது. வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையை ஒட்டி வாரணவாசி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி வழியாக பழைய சீவரம் பாலாற்று பகுதியில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய் வழியாக தாம்பரம் உள்பட சென்னை புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், வாலாஜாபாத் - தாம்பரம் செல்லும் சாலை 6 வழிப்பாதையாக மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. இதனால் வாரணவாசி சாலை வளைவு தரைப்பாலம் அருகே கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, பாலாற்று குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது.