ஓசூர், ஜன.17: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களில் முன்கள பணியாளர்கள் 61 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஓசூர் அரசு மருத்துவமனையில் நேற்று, முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை, ஓசூர் அரசு மருத்துவமனை, காவேரிப்பட்டணம் மேம்படுத்தப்பட்ட அசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 மையங்களில், 61 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் 75 அரசு மருத்துவமனைகள் மற்றும் 551 தனியார் மருத்துவமனைகளில் பதிவு பெற்ற சுமார் 12,192 முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் 11,500 டோஸ் மருந்துகள் பெறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முதலாக இந்த தடுப்பூசியை, ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பூபதி போட்டுக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.