தர்மபுரி, ஜன.17: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். முதல் தடுப்பூசி நர்சு ஜெயந்தி, மருத்துவர் ஜானி அப்ரகாம், முதல்வர் (பொ) டாக்டர் இளங்கோவன், மருத்துவ கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட 60 பேர் போட்டுக்கொண்டனர்.
விழாவில் அமைச்சர் கேபி அன்பழகன் பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி மருந்து 11,800 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மாவட்டத்தில் 10,583 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. 4 மையங்களில் நாளொன்றுக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், மேல்சிகிச்சைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 1,83,516 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 6,524 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 6,414 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 58 பேர் உள்ளனர்,’ என்றார்.