புதுவை அருகே பயங்கரம் டிரைவர் சரமாரி வெட்டி கொலை

பாகூர், ஜன.  17: நண்பர்களுடன் மது அருந்திய டிரைவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். முன்விரோதம் காரணமாக கூலிப்படை ஏவி தீர்த்துக்கட்டப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர்  சாவடி அய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் நந்தன் (28), லாரி டிரைவர். நேற்று மதியம் இவர், காணும் பொங்கலையொட்டி சாவடியை அடுத்த புதுச்சேரி பகுதியான பாகூர் அருகே சோரியாங்குப்பம் மதுக்கடைக்கு பின்புறம் உள்ள காலி மனையில் நண்பர்கள் கார்த்தி, பிரதாப் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு அருகே 5க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று, மது குடித்து ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதனை மனோஜ்நந்தனும், அவரது நண்பர்களும் பார்த்ததால் இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், கத்தி, தடி உள்ளிட்ட ஆயுதங்களால், மனோஜ்நந்தன் மற்றும் அவரது நண்பர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் மனோஜ்நந்தனுக்கு மார்பு, முதுகு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. அவரது நண்பர் கார்த்திக் என்பவருக்கும் உடலில் சில இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் இருவரும் மயங்கி விழுந்தனர்.

சிறிது நேரத்தில், மனோஜ்நந்தன் தாமாகவே எழுந்து கத்திக்குத்து பட்ட இடத்தில் தனது சட்டையால் இறுக்க கட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வதற்காக பைக்கில் குருவிநத்தத்தில் உள்ள தனது நண்பர் வீட்டை நோக்கி சென்றார். அப்போது அங்குள்ள பால் சொசைட்டி அருகே மீண்டும் மயங்கி விழுந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மனோஜ் நந்தனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே, கத்திக்குத்தில் காயமடைந்த கார்த்தியை சிலர், ஆட்டோவில் ஏற்றி, பாகூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவலறிந்த சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கொடாரா, எஸ்பி லோகேஸ்வரன், பாகூர் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். முன்விரோதமா அல்லது  வேறு ஏதும் காரணத்தால் கொலை நடந்ததா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கூலிப்படை ஏவி திட்டமிட்டு மனோஜ்நந்தன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவத்தால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: