திருவெண்ணெய்நல்லூர், ஜன. 17: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மகன் வெங்கடேசன் (35), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று மாலை மொபட்டில் மடப்பட்டு சென்று விட்டு அங்கிருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர், இரண்டு மகள்களுடன் ைபக்கில் திருக்கோவிலூரில் இருந்து மடப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். துலுக்கப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது பைக்கும், மொபட்டும் நேருக்கு நேர் மோதியது. இதில் பைக்கில் சென்ற 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். மொபட்டில் சென்ற வெங்கடேசனின் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.தகவல் அறிந்த வெங்கடேசனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமான நிலையில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.