சாலைப்பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்க வேண்டும்

கோவை, ஜன.17: கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில், மாகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

 கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்ததாவது: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள், பூங்காக்கள் அமைத்தல், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை அமைத்தல் போன்ற ஏராளமான வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை பணிகள், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், தெருவிளக்குகளை பராமரித்தல் போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

இப்பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக களஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் செல்வசிந்தாமணிகுளம், கிருஷ்ணம்பதிகுளம், செல்வம்பதி, குமாரசாமி குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட 9 குளங்களில் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆர்.எஸ். புரம் மாதிரி சாலை, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், உக்கடம் சூரியமின்சக்தி நிலையம், 24*7 குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல், வாகனங்கள் மூலமாக வீடுவீடாக குப்பைகள் சேகரிக்கும் பணிகள் போன்ற அனைத்து பணிகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். சாலைப்பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்க வேண்டும்.  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். கூட்டத்தில் மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, மாநகர பொறியாளர் லட்சுமணன், அனைத்து  மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: