கோவை, ஜன. 17: கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மழையினால் வீடுகள் இடிந்து பெரும் விபத்து ஏற்படும் முன், சேதமடைந்துள்ள இந்த வீடுகளை இடித்து விட்டு, காலதாமதம் இல்லாமல், அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும். அதுவரை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்காலிக வீடுகள் அமைத்து தந்து, இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். இதுதொடர்பாக பல போராட்டம் நடத்தியும் அதிமுக அரசு செவி சாய்க்கவில்லை. எனவே, மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி வரும் 20ம்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.