ஈரோடு,ஜன.17: ஈரோடு அரசு மருத்துவமனை முகாமில் முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்டமாக போடப்படும் தடுப்பூசியை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்கள பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நேற்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கினார். இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் கலெக்டர் கதிரவன் தலைமையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பின்னர், அரசு மருத்துவர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை, சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் என 5 இடங்களில் துவங்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், நர்ஸ், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 13,800 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான 13,800 டோஸ் மற்றும் கூடுதலாக, 20 சதவீத மருந்தும் வந்துள்ளது.