பல்லாவரம்: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில், பழிக்குப்பழியாக வாலிபரை சரமாரியாக வெட்டிவிட்டு சிலர் தப்பி சென்றனர். ஆனால், வெட்டு காயத்துடன் வாலிபர், உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், பரணிபுத்தூர் அருகே சாலையின் அருகே இருந்த முட்புதரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒரு வாலிபர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டார். இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாங்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த வாலிபரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரிடம் விசாரித்தனர். அதில், வியாசர்பாடியை சேர்ந்த சூர்யா (எ) சூர்யபிரகாஷ் (19). வியாசர்பாடியில் பிரசாந்த் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். கடந்த 3 நாட்களுக்கு முன் அதே கொலை வழக்கில் தொடர்புடைய இவரது நண்பர் பாலச்சந்தர் என்பவர் சாலை விபத்தில் இறந்தார். அவரது இறப்புக்கு சூர்யபிரகாஷ் செல்லவில்லை.