பெரியகுளம் அருகே டிராக்டர் மீது பஸ்கள் மோதி 10 பேர் காயம்

பெரியகுளம், ஜன. 13: பெரியகுளம் அருகே, சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது 2 பஸ்கள் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து கம்பத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பெரியகுளம் அருகே எண்டப்புளி பகுதியில் வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரின் பின்புறம் எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. அப்போது அதனை பின்தொடர்ந்து வந்த தேனி செல்லும் அரசு பஸ்சும், கம்பம் பஸ்சின் பின்புறத்தில் மோதியது.

இந்த விபத்தில் ஒரு குழந்தை, நடத்துநர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த 4 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பெரியகுளம் வடகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக வத்தலக்குண்டுதேனி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: