கணவனை கொன்ற மனைவிக்கு குண்டாஸ்

தேனி, ஜன. 13: கடமலைக்குண்டு அருகே, மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்காளை (42), சமையல் தொழிலாளி. கேரளாவில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கலையரசிக்கும் (29), அதே ஊரைச் சேர்ந்த காங்கிரீட் கலவை இயந்திரம் வைத்திருந்த சேதுபதிக்கும் (33), கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை முத்துக்காளை கண்டித்தார். இதையடுத்து கடந்த அக்டோபரில் கலையரசியின் பெற்றோர் வசிக்கும் தேனி அருகே உள்ள தர்மாபுரியில், கலையரசி கணவருடன் குடியேறினார். இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்துக்கட்ட, சேதுபதி, அவரது நண்பர் மேலப்பட்டி கணேசன் (33) ஆகியோருடன் திட்டம் கலையரசி தீட்டினார்.

இந்நிலையில், கடந்த நவ.3ல் முத்துக்காளையை ஏமாற்றி சின்னமனூருக்கு கலையரசி அழைத்து சென்றார். இடையில் ஆள் நடமாட்டம் இல்லாத தோட்டப்பகுதியில் மறைந்திருந்த சேதுபதி, கணேசன் ஆகியோர் சேர்ந்து முத்துக்காளையை அடித்து கொன்று கிணற்றில் வீசினர். இந்த வழக்கில் கலையரசி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கணேசன், சேதுபதி ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கள்ளத்தொடர்புக்காக கணவரை கொன்ற கலையரசியை, எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரையின் பேரில், கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில், போலீசார் குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

Related Stories: