ஆர்.எஸ்.மங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய மிளகாய் செடிகள் பயிர்கள் அழுகுவதால் விவசாயிகள் கவலை

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.13:  ராமநாதபுரம் மாவட்டத்தில், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக கூடுதலாக விவசாயிகள் மிளகாயை சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக இரட்டையூரணி, புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, சவேரியார்பட்டினம், செங்குடி, பூலாங்குடி, வாணியக்குடி, சீனாங்குடி, வண்டல், வரவணி, சேத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு ஆண்டில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மிளகாய் செடிகள் நன்றாக குத்து செடிகளாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில்   கடந்த ஒரு வாரமாக  இப்பகுதியில் பெய்து வரும் மழையால், வயல்களில் தண்ணீர் தேங்கி மிளகாய் செடிகள் மூழ்கியுள்ளன. இதனால் பெரும்பாலான செடிகள் வயல்களில் அழுகிவருகின்றன. பல ஆயிரங்களை கடன் வாங்கி செலவு செய்து மிளகாய் சாகுபடி செய்துள்ள நிலையில், மழையால் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பரிதவித்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு  மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், தமிழகத்தில் அதிகமான மிளகாய் சாகுபடி  செய்யும் மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது. இங்கு கூடுதல் மிளகாய்   சாகுபடி  செய்வது ஆர்.எஸ். மங்கலம் பகுதியாகும். இங்கு  விளையும் மிளகாய் மிகவும் தரமாக இருக்கும் என்பதால் தமிழகம் முழுவதும் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது. இதற்காக  வாரம் ஒருமுறை சனிக்கிழமை தோறும் சந்தை நடைபெறும். இவ்வளவு சிறப்பு

வாய்ந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும்  தொடர் மழையால் மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: