×

கடந்த 3 மாதங்களில் குழந்தைகளுக்கு எதிராக 1,600 வழக்குகள் பதிவு

ஈரோடு, ஜன. 13:  தேசிய அளவில் கடந்த 3 மாதங்களில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 1600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் தெரிவித்துள்ளார். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு தொற்று வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எவ்வகையான வழிமுறைகளைக் கையாண்டார்கள், அவற்றில் எவை சிறந்த வழிமுறைகள் என்பதை ஆய்வு செய்துள்ளோம். கலெக்டர், எஸ்பி. ஆகியோர் துறை ரீதியாக அறிக்கை அளித்துள்ளனர். குழந்தை பாதுகாப்பில் ஒரு முன்மாதிரி மாவட்டமாக ஈரோடு திகழ்ந்து வருகிறது. கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு இவை மூன்றிலும் முன்மாதிரியாக ஈரோடு உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எந்த வகையில் தடுக்கப்பட்டது?, எவ்வாறு அவர்களுக்கு நீதி கிடைத்தது?, போக்சோ சட்ட வழக்குகளில் எவ்வளவு பேருக்கு நீதி கிடைத்தது?, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது என்பதையும் விரிவாக கலந்தாய்வில் ஆய்வு செய்யப்பட்டது. குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கையில் ஈரோடு மாவட்டம் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் தடுப்பது, அவர்களை மீட்பது தொடர்பான நடைமுறையை தேசிய குழந்தைகள் காப்பகம் விரைவில் வெளியிடவுள்ளது.

அதேபோல குழந்தைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து வெகு விரைவில் தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் வெளியிடப்படவுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. பதியப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 75 சதவீதம் பேருக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்கியுள்ளது. பத்திரிகைகளில் வெளியாகும் தகவல்களில் இருந்து மாவட்ட நிர்வாகம் மூலம் உண்மைத்தன்மை அறிந்து 90 சதவீத வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளோம். மூன்று மாதத்தில் மட்டும் தேசிய அளவில் ஆணையம் சார்பில் 1600க்கு மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, 1,450 வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளிடையே போதை மருந்து கலாச்சாரத்தை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.  ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள் இல்லை. குழந்தைகள் கல்வி, சுகாதாரத்தில் ஈரோடு மாவட்டம் சிறந்து விளங்குகிறது. குழந்தைத் தொழிலாளர்களைத் தடுக்க, கண்காணிக்க சிறு, சிறு குழுக்கள் அமைக்கவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தைகள் நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...