புதுச்சேரி, ஜன. 13: விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதன்மையாக விளங்குகிறது என முதல்வர் நாராயணசாமி பேசினார். புதுச்சேரி அரசு வேளாண் துறை சார்பில் கடந்த சொர்ணவாரி பருவம் 2020 நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்தது. வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார். சொர்ணவாரி 2020-21 பட்டத்தில் 5,518 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்த 2,836 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 275 அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகையாக ரூ.2 கோடியே 59 லட்சத்து 46 ஆயிரம் மற்றும் ரூ.17 லட்சத்து 72 ஆயிரத்து 800 என மொத்தம் 3,111 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 77 லட்சத்து 18 ஆயிரத்து 800க்கான காசோலை இந்தியன் வங்கி ரெட்டியார்பாளையம் கிளை மேலாளரிடம் வழங்கப்பட்டது. இது, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு. இதை எல்லோரும் சொல்வார்கள், ஆனால் செய்ய மாட்டார்கள். இப்போது மத்தியில் உள்ள அரசும், விவசாயிகள் அரசு எனக்கூறிக் கொண்டு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவந்துள்ளது. இச்சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் கடும் குளிர், மழையை பொருட்படுத்தாமல் தங்களை வருத்திக் கொண்டு 2 கோடி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தொடர்ந்து திட்டங்களை செம்மையாக நிறைவேற்றி வருகிறோம். இந்த பெருமை எல்லாம் துறை அமைச்சர், செயலர், இயக்குநர் மற்றும் அதிகாரிகளைத்தான் சாரும். நான் நிதி கொடுப்பது மட்டும் தான்.