குடியிருப்புகளுக்கு செல்ல பாதை அமைக்க ஒப்புதல்

மேட்டூர், ஜன.13: மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி 3வது வார்டில் உள்ளது கருப்புரெட்டியூர் வண்டிகாரன்காடு. இப்பகுதியில் 5 குடும்பத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் பாதை விடப்பட்டிருந்தது. இங்கு வசிப்போர் பள்ளி மற்றும் கடைகள், மருத்துவமனைக்கு செல்ல இப்பாதையை பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த பாதையை நில உரிமையாளர் விவசாயம் செய்ய முள் வைத்து அடைத்து விட்டார். தற்போது இவர்கள் அருகில் பிளாட் வழியாக சென்று வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சிறுமி சுவஸ்திகா  பேசிய வீடியோ வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வெளியானது. இதுகுறித்த தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதியை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதன்பேரில், நேற்று காலை டி.எம்.செல்வகணபதி, நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வண்டிகாரன் காட்டிற்கு வந்தனர். நில உரிமையாளரிடம் பேசி விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் பாதை அமைக்க நிலம் பெற்றுத்தந்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். அப்போது, பாதை பிரச்சனையை தீர்த்து வைத்த அவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: