கிருஷ்ணகிரி, ஓசூரில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.13: கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் 8ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவினையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு புண்ணியாதானம், ஸ்ரீராமர்-அனுமர் சிறப்பு பஜனை, கணபதி ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 3 மணிக்கு வேள்வி பூஜை, 5 மணிக்கு அபிஷேக அலங்காரம், 8.30 மணிக்கு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்து. ஜெயந்தி விழாவில் பஞ்சமுக ஆஞ்சநேயர் வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், தின்னகழனி மணி குழுவினரின் அனுமன், அர்ச்சுனன், அம்மன் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம, வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சுவாமிகள் கோயிலில், ஆஞ்சநேயர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயில், ராசுவீதி ராஜாராமர் மற்றும் அபய ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணகிரி கேஆர்பி டேம் குன்று ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஓசூர்:ஓசூர் தர்கா மாருதி நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று மூலவருக்கு வெண்ணை காப்பு அலங்காரம், 108 வடைமாலை சாத்தப்பட்டது. பிரசித்தி பெற்ற பண்டாஞ்சநேயர் கோயில், கூகனூர் அனுமந்தராயசாமி கோயில், ஒன்னல்வாடி அனுமந்தராயசாமி கோவில், பாகலூர் சாலையில் உள்ள அனுமன் கோவில், ஏரித்தெரு, ராம் நகரில் உள்ள அனுமன் கோயில்களில் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், வெண்ணெய், நெய், மஞ்சள், திருநீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.  தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: