கிருஷ்ணகிரி, ஜன.13: கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் 8ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவினையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு புண்ணியாதானம், ஸ்ரீராமர்-அனுமர் சிறப்பு பஜனை, கணபதி ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 3 மணிக்கு வேள்வி பூஜை, 5 மணிக்கு அபிஷேக அலங்காரம், 8.30 மணிக்கு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்து. ஜெயந்தி விழாவில் பஞ்சமுக ஆஞ்சநேயர் வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், தின்னகழனி மணி குழுவினரின் அனுமன், அர்ச்சுனன், அம்மன் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம, வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சுவாமிகள் கோயிலில், ஆஞ்சநேயர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.