கிருஷ்ணகிரி, ஜன.13: நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. அப்போது கிருஷ்ணகிரி தியேட்டர்களில் படத்தின் சிறப்பு காட்சி வெளியாக தாமதமானதால் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று (13ம்தேதி) வெளியாகிறது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் போலீசார், தியேட்டர் உரிமையாளர்கள், விஜய் ரசிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் கிருஷ்ணகிரி டிஎஸ்பி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு டிஎஸ்பி சரவணன் பேசியதாவது: கிருஷ்ணகிரி நகரில் சட்டம் ஒழுங்கை காக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ரசிகர்கள் என்ற பெயரில் யாரேனும் பிரச்னைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காலத்தில் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் வர வேண்டும். போலீஸ் ஸ்டேசனில் ஏற்கனவே வழக்குகள் இருப்பவர்கள் யாரேனும் வந்தாலோ, பிரச்னையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.