ரயில் பயணத்திற்கான முன்பதிவு துவக்கம்

கிருஷ்ணகிரி, ஜன.13: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வணிக வளாகத்தில், தென்மேற்கு ரயில்வே கணினி முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் ராணுவ வீரர்கள் உள்ளதால் அவர்கள் பல்வேறு வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களுக்கு செல்லவும், இங்கு ரயில் பயணத்திற்கான முன்பதிவு செய்து வருகின்றனர். இங்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியூர் மற்றும் வெளி மாநிலம் செல்ல ரயில் முன்பதிவு செய்கின்றனர். இதனால் ஒரு மாதத்திற்கு, ₹15 லட்சம் வரை ரயில்வேயிக்கு வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க கடந்த 2020 மார்ச் மாதம் பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டதால், ரயில் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக பல்வேறு மாநிலங்களுக்கு ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டதால், நிறுத்தப்பட்டிருந்த ரயில் முன்பதிவு கடந்த மாதம் மீண்டும் துவக்கப்பட்டது. அதன்படி ஏற்கனவே தர்மபுரி, ஓசூரில் ரயில் முன்பதிவு துவங்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் நேற்றுமுன்தினம் முதல் ரயில் பயணத்திற்கான முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது. ஒரேநாளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர்.

Related Stories: