வாட்ச் டவர் அமைத்து கண்காணிப்பு

தர்மபுரி, ஜன.13:நாடு முழுவதும் நாளை (14ம் தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. புத்தாடைகள் வாங்க, பொருட்கள் வாங்க என கடைத்தெருகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். தர்மபுரி சின்னசாமி தெரு, ஆறுமுகம் தெரு, சித்தவீரப்ப தெரு உள்ளிட்ட கடைத்தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகையையொட்டி வியாபாரம் களை கட்டியுள்ள நேரத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். குற்றச்செயல்களை தடுக்கவும், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் காவல்துறை சார்பில், சின்னசாமி தெருவில் வாட்ச் டவர் அமைத்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி நகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சாலையின் நடுவில் டூவிலர்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி குற்றச்செயல்களை தடுக்க, வாட்ச் டவர் அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அனைத்து ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க சுழற்சி முறையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: