நாகர்கோவில், ஜன.13: பொங்கல் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தொடர் விடுமுறை வருவதால், சுற்றுலா தலங்களுக்கு யாரும் வர வேண்டாம் என கலெக்டர் கேட்டுக் கொண்டு உள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (14ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இன்று (13ம் தேதி) போகி பண்டிகை ஆகும். குமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. போகி பண்டிகையையொட்டி,வீடுகளில் தேவையில்லாத பொருட்களை தீ வைத்து கொளுத்துவார்கள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் போகி கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். வடசேரி, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம், திங்கள்சந்தை உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் ஏராளமான வியாபாரிகள் குவிந்துள்ளனர். திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் குவிந்துள்ளன. மஞ்சள் குலைகள் மற்றும் பனங்கிழங்கு வியாபாரிகளும் அதிகளவில் வந்துள்ளனர். கடந்த 3 நாட்களாக காலை மற்றும் இரவில் பெய்து வரும் மழையால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். நேற்று இடைவிடாமல் மழை கொட்டியதால் வியாபாரம் முடங்கியது.