×

பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கரும்பு, வாழைத்தார், மஞ்சள் கொத்து விற்பனை விறுவிறுப்பு

திருவாரூர், ஜன.13: பொங்கல் விழாவையொட்டி திருவாரூரில் கரும்பு, வாழைத்தார் மற்றும் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து விற்பனை விறுவிறுப்படைந்தது. மக்கள் கூட்டத்தால் கடைவீதி களைகட்டியது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையானது தமிழர் திருநாளாக நாடு முழுவதும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்வது, வர்ணம் தீட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்வர். இதுமட்டுமன்றி பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையன்று வீட்டில் இருந்து வரும் தேவையில்லாத பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்துவதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்காக மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மற்ற பண்டிகைகளை விட இந்த பண்டிகையானது தொடர்ந்து 3 நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி தாய், தந்தை மற்றும் உறவினருடன் ஒன்றாக பொங்கலிட்டு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் பொங்கல் என்றாலே பச்சரிசி வெல்லம் மற்றும் முந்திரி, திராட்சை, ஏலம், நெய் கொண்ட சர்க்கரைப்பொங்கல் மட்டுமின்றி வெண் பொங்கலும் செய்யப்பட்டு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையில் செங்கரும்பு மற்றும் வாழைப்பழமும் இந்த பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் பெருகினாலும் பெரும்பாலானவர்கள் தற்போது வரையில் இந்த பொங்கல் பண்டிகையை மண்பானையும், மண் அடுப்பையும் கொண்டு பழமை மாறாமல் கொண்டாடும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பண்டிகையினை ஏற்ற இறக்கம் இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கலாக கொண்டாட வேண்டும் என அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த பொங்கல் திருநாளானது நாளை மறுதினம் (15ம் தேதி) கொண்டாடப்படவுள்ள நிலையில் திருவாரூர் பகுதியில் இந்த பொங்கல் திருநாளையொட்டி செங்கரும்பு, வாழைத்தார் மற்றும் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து விற்பனையானது நேற்று அமோகமாக நடைபெற்றதால் இந்த விழாவானது களைகட்டியது. மேலும் 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கரும்பு கட்டின் விலை ரூ.200 முதல் ரூ.300 வரை இடத்திற்கு தகுந்தாற்போல் விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் கடந்த காலங்களில் இதற்கான ஒதுக்கப்பட்ட வாரச்சந்தை போன்ற இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலை மாறி தற்போது நகர் முழுவதும் மினி லாரிகள் மூலம் வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு என இந்த செங்கரும்பு விற்பனை செய்யப்பட்டு வருவதால் எந்த இடத்தில் விலை குறைவாக உள்ளது என பொதுமக்கள் அங்குமிங்கும் தேடி அலைந்து தங்களுக்கு விருப்பப்பட்ட கரும்புகளை வாங்கிச் சென்றனர்.

இதே போன்று பொங்கல் பண்டிகைக்கு முக்கிய பங்கு வகிக்கும் வாழைத்தார் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. சாதாரணமாக பண்டிகை காலங்களில் தங்களது வீடுகளுக்கு அதிகபட்சம் ஒரு சீப்பு அல்லது 2 சீப்பு மட்டுமே வாழைப்பழம் வாங்கும் நிலையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு மட்டும் பெரும்பாலானோர் முழு தாராக வாங்கும் வழக்கம் இருந்து வருவதால் பொதுமக்கள் பலரும் இந்த வாழைத்தார்களை விலை கொடுத்து வாங்கி தங்களது வாகனங்களில் எடுத்துச் சென்றனர். மேலும் இந்த பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பானையில் முக்கிய இடம் வகிக்கும் இஞ்சிக்கொத்து மற்றும் மஞ்சள் கொத்து விற்பனையும் அமோகமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது