×

பெரம்பலூரில் பரிதாபம் பெண் தீக்குளித்து சாவு 2 குழந்தைகள் தப்பினர்

பெரம்பலூர், ஜன.13: கணவர் திருச்சி சென்ற நேரத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 2 குழந்தைகள் அறைக்குள் ஓடி தப்பினர். நாமக்கல் மாவட்டம் தோளூர்பட்டியை சேர்ந்தவர் குமார்(42). இவரது மனைவி மதுரை மாவட்டம் வாடிபட்டியை சேர்ந்தவர் மகாலெட்சுமி(35). இவர்களுக்கு ஜெய (10). மோனிகா (2) என 2 மகள்கள் உள்ளனர். பெரம்பலூர் அருகே எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர், மனைவி மற்றும் மகள்களுடன் பெரம்பலூர் முத்துநகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் வசித்து வரும் தனது அக்காவை பார்ப்பதற்காக குமார் நேற்றுகாலை திருச்சி சென்றார். மகாலெட்சுமியும் கணவரை வழியனுப்பி வைத்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் சென்ற மகாலெட்சுமி, மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீதும், மூத்த மகள் ஜெய மீதும் ஊற்றியுள்ளார். கண் எரிச்சலுடன் தடுமாறிய ஜெய, ஏதோ விபரீதம் நடக்க போகிறது என பயந்து தங்கை மோனிகாவை இழுத்துக்கொண்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.

பின்னர் அறையின் ஜன்னல் கதவை திறந்து சத்தம் போட்டுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது மற்றொரு அறையில் இருந்து புகை வெளியே வந்து கொண்டிருந்தது. சந்தேகமடைந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அங்கு மகாலட்சுமி தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்தவர்கள் படுக்கை அறை கதவை திறந்து இரு குழந்தைகளையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் மகாலட்சுமி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மகாலட்சுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : children ,death ,Perambalur ,fire ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...