அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சம் முறைகேடு தொழிற்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில்

வேலூர், ஜன. 13: வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தில் பஸ்களில் டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சத்துக்கும் மேல் முறைகேடு நடப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழகத்தில் 1972ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது 22 ஆயிரத்து 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, திருச்சி, சென்னை ஆகிய கோட்டங்களுடன் 20 மண்டலங்களை கொண்டு 330 டெப்போக்கள் இயங்கி வருகிறது.

இதுதவிர அரசு விரைவு போக்குவரத்துக்கழகமும் இயங்கி வருகிறது. இவற்றில் தினமும் 2 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். டிரைவர், கண்டக்டர், டெக்னீசியன், அலுவலர்கள் என மொத்தம் 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 20 ஆயிரம் பேர் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அரசு பஸ்களுக்கு அந்தந்த டெப்போக்களில் டீசல் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தில் உள்ள பஸ்களில் டீசல் நிரப்புவதில் லட்சக்கணக்கில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 650க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு பஸ்சுக்கான டீசல் அந்தந்த பெட்போவில் உள்ள பெட்ரோல் பங்க் மூலம் நிரப்பப்படுகிறது.

இதில் ஒரு லிட்டர் டீசலுக்கு 5.5 கி.மீட்டர் முதல் 6 கி.மீட்டர் வரை மைலேஜ் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் ஆயுட்காலம் முடிந்த பஸ்கள் இயக்கப்படுவதால், மைலேஜ் வரவில்லை.

அரசு பஸ்களில் 165 முதல் 200 லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்க்கில் முழு கொள்ளவுக்கு டீசல் நிரப்பப்படுவதில்லை. அதற்கு மாறாக பஸ் இயக்கப்படும் தூரத்தினை கணக்கிட்டு, அதற்கு தேவையான டீசல் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதனால் மாதந்தோறும் அந்தந்த டெப்போக்களில் உள்ள டீசல் கையிருப்பு கணக்கிலும், நிர்வாகத்திற்கு கணக்கு காட்டும் டீசலின் அளவிற்கு சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் லிட்டர் அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது.அதன்படி வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தில் உள்ள 10 டெப்போக்களில், ஒவ்வொரு மாதமும் சுமார் 24 ஆயிரம் லிட்டர் டீசல் முறைகேடு நடக்கிறது.

இதனால் மாதந்தோறும் ₹20 லட்சத்துக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக தெரிகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து, டீசல் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தை போல், தமிழகத்தில் உள்ள டெப்போக்களிலும் டீசல் முறைகேடு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: