பெரணமல்லூர், செய்யாறு, தண்டராம்பட்டில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெரணமல்லூர், ஜன.13: பெரணமல்லூர் பகுதியில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு அதிகாலை மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு தீபாராதனை நடந்தது.இதைத்தொடர்ந்து அனுமன் சன்னதியில் மூலவருக்கு திருமஞ்சனம் நடத்தி வெற்றிலை, வடமாலை சாத்தி பூக்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் பெரணமல்லூர் பேரூராட்சியில் அமைந்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து அனுமனுக்கு பக்தர்கள் வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டனர். மேலும் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனுமன் சன்னதியில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் தீபாராதனையும் நடைபெற்றது. பெரணமல்லூர் பகுதியில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

செய்யாறு: அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த எடத்தனூர் கிராமத்திலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் அனுமன் ஜெயந்தியையொட்டி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories: