கடையம், ஜன. 13: கடையம் பகுதி ஆறுகளில் உயிர்ப்பலிகளை தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பூங்கோதை எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். தென்காசி மாவட்டம், கடையம் அருகே ஏபிநாடானூரை சேர்ந்த அபிநயா (18) கடந்த 6ம்தேதி பாப்பான்குளம் கடனா ஆற்றில் குளிக்கச்சென்ற போது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். இதே போல் கடந்த 9ம் தேதி கீழ ஆம்பூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (27) என்ற வாலிபர் கிழ ஆம்பூர் கடனா ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் மூழ்கினார். இதையடுத்து 3 நாட்களாக தேடிய தீயணைப்பு வீரர்களால், அவரது உடலை சடலமாகத்தான் மீட்க முடிந்தது. தகவலறிந்த பூங்கோதை எம்எல்ஏ, ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்த அபிநயா, ஆனந்தராஜ் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.