நாமக்கல், ஜன.12: நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், இன்று(12ம்தேதி) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சுவாமிக்கு சாத்தப்படுகிறது. காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஜெயந்தி விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் பல்வேறு வகையான வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவு வாயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி என மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களில் 2 டன் சாமந்தி, ஆஸ்டர் வகை பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய ₹250 கட்டணத்தில் சிறப்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.