குமாரபாளையம்,ஜன.12: குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு, பொங்கல் போனஸ் கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் பொங்கல் போனஸ் கோரி, கடந்த வாரம் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நேற்று போனஸ் கோரிக்கையில் அரசும், அதிகாரிகளும் தலையிட்டு பேசி தீர்வுகாண வலியுறுத்தி, நேற்று குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் மோகன், செயலாளர் அசோகன், நகர செயலாளர் பாலுசாமி, ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தாசில்தார் தங்கத்திடம் மனு கொடுத்தனர். இதையடுத்து குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் பொங்கல் போனஸ் குறித்து இன்று மாலை 4 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திட தொழிற்சங்கத்தினருக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் தாசில்தார் தங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.