வேப்பனஹள்ளி, ஜன.12: வேப்பனஹள்ளி அருகே நேரலகிரி கிராமத்தில், நேற்று முன்தினம் காலை எருதாட்ட நிகழ்ச்சிக்கு முன்னோட்டம் நடந்தது. அப்போது, அங்குள்ள ஒரு மாடி வீட்டின் முன்பகுதியில் 15க்கும் மேற்பட்டோர் நின்றபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வீட்டின் முன்கூரை சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டின் முன் நின்று கொண்டிருந்த எட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிபாலன் (62), நேரலகிரியைச் சேர்ந்த பள்ளி மாணவி மேகா(8) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய வேப்பனஹள்ளி போலீசார், அனுமதியின்றி எருதாட்ட முன்னோட்டம் நடத்தியதாக நேரலகிரியைச் சேர்ந்த பத்மநாபன், அம்மாசி கவுண்டர், திம்மராயப்பா, முனிராஜ், சந்தோஜிராவ் மகன் நாகராஜ், சிவா, அப்பையப்பா மகன் நாகராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவா, நாகராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மற்ற 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.