கிருஷ்ணகிரி, ஜன.12: கிருஷ்ணகிரி பறக்கும்படை தனி தாசில்தார் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி வந்த லாரியை அதிகாரிகள் நிறுத்தியபோது லாரி டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடினர். இதை தொடர்ந்து லாரியை சோதனையிட்டபோது அதில் 10.4 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. தாசில்தார் விசாரணையில் அந்த அரிசி விழுப்புரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் பகுதிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, லாரி மற்றும் அரிசியை கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதை மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து லாரி கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.