தர்மபுரி, ஜன.12: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஆலமரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் சிவக்குமார்(43). அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சிவக்குமார் தனது குடும்பத்துடன் வந்தார். அங்கு நின்றிருந்த கலெக்டர் காரின் அருகே தரையில் அமர்ந்து திடீரென குடும்பத்தோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர் கூறுகையில், ‘எங்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றை, வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி, வருவாய்த்துறையினர் முறைகேடு செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு முதல் பாலக்கோடு தாலுகா அலுவலகம், ஆர்ஐ மற்றும் விஏஓ அலுவலகத்தில் 70 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், என்னை தற்காலிக பணிநீக்கம் செய்துவிட்டனர். எனவே, மாவட்ட கலெக்டர் உண்மைத்தன்மையை விசாரித்து, எனது கிணற்றை மீட்டுத்தர வேண்டும். இல்லையென்றால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியல்லை’ என்றார்.