செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் நடந்த சமத்துவ ெபாங்கல் விழாவில், திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், 1000 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பை வழங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆப்பூர் கிராமத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. ஒன்றிய திமுக செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமை வகித்தார். திமுக நிர்வாகிகள் ஆப்பூர் சந்தானம், எம்.கே.டி.கார்த்திக், கே.பி.ராஜன், ரவிசந்திரன், குமாரசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், திமுக பிரமுகரும் தொழிலதிபருமான பி.மதுசூதனன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, மக்கள் கிராம சபை கூட்டத்தை துவங்கி வைத்து, அதிமுகவை நிராகரிப்போம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, முதல்வராக கொண்டு வர சபதம் ஏற்போம் என பொதுமக்களுடன் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து, மக்கள் கிராம சபை கூட்டத்தில், பங்கேற்றவர்களுக்கு, எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியின் அவலங்கள் குறித்த துண்டு பிரசூரங்களை வழங்கினர். மேலும், சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்து ஆப்பூர், சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, மஞ்சள் கொத்து, கரும்பு, பாத்திரம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினர். திமுக நிர்வாகிகள் கே.ஆர்.சி.ரத்திஷ், இ.சிலம்புசெல்வன், எஸ்.சீனு உள்பட பலர் கலந்துகொண்டனர்.