காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரத்தில் செவிலிமேடு, ஓரிக்கை உள்பட பல பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் தெருவிளக்குகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திடீர் ஆய்வு நடத்தினார். இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர், கழிவுநீர் தேங்குதல், தெரு மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை என்பது உள்பட பொதுமக்கள் தரப்பில் இருந்து அடிக்கடி ஏராளமான புகார்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு சென்றன. இதையடுத்து, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், நேற்று முன்தினம் இரவு திடீரென காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள நேரு நகர், செல்லம்மாள் நகர், செவிலிமேடு ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார்.