திருச்சி, ஜன. 12: அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தமிழ் புறக்கணிப்பு கண்டித்து திருச்சியில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தமிழை புறக்கணித்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், தமிழில் தேர்வு நடத்த வலியுறுத்தியும் திருச்சி தலைமை தபால் நிலையம் முன் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர மாவட்ட செயலாளர் லெனின் தலைமை வகித்தார். இதில் பலர் பங்கேற்று அஞ்சல் துறை விண்ணப்ப நகலை எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.