புதுக்கோட்டை, ஜன.12: விராலிமலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, விராலிமலை கிராமம், அம்மன்குளம் திடலில் வருகிற 17ம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடி வீரர்களுக்கான பதிவும், காளைகளுக்கான பதிவும் மற்றும் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படவுள்ள காளைகளின் உரிமையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆகியோருக்கு மருத்துவ தகுதி, ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஆகியவை நடைபெற உள்ளது. இதன்படி விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 13ம் தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய நாட்களில் மாடுபிடி வீரர்கள் பதிவு, காளைகள் பதிவு மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஆகியவை நடைபெற உள்ளது. மேலும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பதிவின் போது ஆதார் அட்டை மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.