கரூர், ஜன. 12: தொடர் மழை மற்றும் பொங்கல் பண்டிகையை ஆகியவற்றை முன்னிட்டு கரூர் கலெக்டர் அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுதும் ஜனவரி 14ம்தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளன. மேலும், மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை முதல் மாலை வரை சாரல் மழை மாவட்டம் முழுவதும் பெய்தது. வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் கோரிக்கை சம்பந்தமாக மனு அளிக்க ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். ஆனால், நேற்று தொடர் மழை மற்றும் பொங்கல் பண்டிகை போன்றவை காரணமாக கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மக்களின் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம் வளாகம் நேற்று வெறிச்சோடியே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.