ராஜபாளையத்தில் வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

ராஜபாளையம், ஜன. 12:  வேளாண்துறையின் விவசாய விரோத செயல்களைக் கண்டித்து ராஜபாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வேளாண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நேருசிலை பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று வேளாண்மை துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது,  ராஜபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டும். தென்னை காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு  தரவேண்டிய பணத்தை வசூல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து பெற்று தரவேண்டும் எனக் கூறி முழக்கமிட்டனர். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா, மாவட்டச் செயலாளர் அம்மையப்பன், தமிழ்நாடு தென்னை விவசாய சங்க தலைவர் ராமமூர்த்தி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: